Monday, July 27, 2020

பொய் வண்ணம்...23... ஏழையின் விண்ணப்பம்..

என்ன கேட்கலாம்
இப்புத்தாண்டில் அவனிடம்?
முட மூட குறைப்பிரசவங்களை
ப்ரசிவிப்பதை விட்டு
இரட்டை நாக்கு,
இரும்பு இதய ஆடைகள் இல்லாத
முழு நிர்வாணங்களை மட்டுமே
படைக்கும் படி கேட்கலாமா?

கருவை சுமக்கும் கன்னியையும்
அந்த கன்னி சுமக்கும் கருவையும்
கலைத்துவிட கேட்போமா- இல்லை
அந்த காமுகனை கழுவிலேற்றி
கொன்றுவிட கேட்போமா?

வாழ்க்கைக்கு உதவாத
வாதங்கள் புரிபவன் வாயை
கட்டி விட கேட்போமா இல்லை
அவன் மூளி எழுத்துக்களை
முடமாக்கி விட
கோரிக்கை விடலாமா ?

ஒருவேளை சோறிட இயலாத
கல்வியை மறுப்போமா?
இல்லை அதை போதிப்பவனுக்கே
வாழ்க்கை கல்வியை
கொஞ்சம் நாமே சொல்லலாமா?

வரதட்சணை தீயை வளர்ப்பவனை
வதம் செய்யச் சொல்லலாமா ?
இல்லை அவனை மணக்க
நாமே இனிமேல் தட்சணை கேட்கலாமா?

அரிசன சகோதரன் நுழையா கோவிலை
தகர்க்கத் சொல்லலாமா?
இல்லை தரிசனம் மறுக்கும்
ஆண்டவனையே
கொஞ்சம் தள்ளி விடலாமா?

இக்கொடுமைகள் இல்லா
புதிய சமுதாயத்தை படைக்க
சொல்லலாமா?
இல்லையேல் படைப்பதயே
கொஞ்சம்
நிறுத்த சொல்லலாமா

No comments:

Post a Comment